Skip to main content

பறவையே, எங்கு இருக்கிறாய்!

TLDR; If you merely wish for something and do nothing, you may not get it. If you seek with intent, the universe will bring it to you.

 

முன்னொரு காலத்துல கிம்ப்பியில் (Gympie, QLD) வாழ்ந்தப்ப, ஒரு நாள் காலங்காத்தால 6 மணிக்கு கொக்கரக்கோன்னு கோழி கூவறதுக்கு முன்னால, அந்த பறவையோட பாடலை முதல் முதலாக் கேட்டேன். குரல் ரொம்ப நல்லாவும், பாட்டு வித்தியாசமாவும் இருந்ததால, என்ன பறவையா இருக்கும்னு தூக்கத்தை மறந்து யோசிச்சேன். அந்தப் பறவை எப்படி இருக்கும்னு பார்க்க ஆசையா வந்துந்துச்சு. (கவிதை மொழியில் யாரோ ஒரு பெண்ணை உருவகப்படுத்தல ப்ரோ; சத்தியமா பறக்கிற பறவையேதான்!)


அப்புறம், காலைப்பசி வந்ததும், ஆர்வம் பறந்துபோய், இன்னொரு நாள் பாத்துக்கலாம்னு, மூக்கு புடிக்க சாப்டுட்டு, ஆபீஸ் போய்ட்டேன். இது சில, பல நாட்கள் தொடர்ந்தது. பாக்காமலே, அந்த பறவை மேல ஒரு ‘இது’. இதுன்னா, ஒரு ஆர்வம்.


ஒரு நாள், அந்தப் பறவையை அடையாளம் காண முடியுமான்னு ஆபீஸ் நண்பரிடம், கேட்டேன்.

‘பார்க்க எப்படி இருந்துச்சு?’ன்னு அவர் கேக்க;  

‘பார்க்கவே இல்லையே!’ நான் சொல்ல; 

‘குரல் எந்த மாதிரி பேட்டர்ன்’ன்னு திரும்ப அவர் கேட்க, 

அடுத்த பதினைந்து நிமிடங்களுக்கு, அந்த பறவையின் ஒலி / பாடலை வார்த்தைகளால், உடல் மொழியால்(!?) விளக்க முயற்சித்தேன், முடியல. விட்டாச்சு!


அப்பப்ப, அந்த பறவையின் குரலை கேட்க நேரும்போது, ‘ச்சே, இந்த பறவைய எப்படியாவது கண்டுபிடிக்கணும், பார்த்துடணும்-னு’, ​​ஆசை மட்டும் அப்பப்ப எட்டிப் பார்க்கும்; சில முறை அந்த பறவையின் குரலை பதிவு செய்யக்  கூட முயற்சித்தேன்; ஆனா, அப்ப (இப்பயும்தான்!) என்னிடம் இருந்த ஸ்மார்ட்(!) போன்  அந்த பறவையின் குரலைப் பதிவு செய்ய சரியாக உதவவில்லை.


11 ஆண்டுகளுக்கு பின்பு, 2020 நவம்பரின் ஒரு ஞாயிற்றுக்கிழமை,  பிரிஸ்பனில் வீட்டருகே, அதிகாலைத் தூக்கத்தில், எப்போதோ கேட்ட அதே (மாதிரி) பறவையின் குரல், திரும்பக் கேட்டது. சடக்கென எழுந்து, மனைவியின் ஐபோனை எடுத்துக்கொண்டு, குரல் வந்த திசை  தேடி, தோட்டத்துக்குப் பக்கமாய்  ஓடினேன். பக்கத்தில் உள்ள பூங்காவிலிருந்துதான் அந்தக் குரல் கேட்டது. அந்த பக்கம் போய், தோட்ட வேலி அருகே நின்று அந்தப் பறவையின்  குரலை பதிவு செய்தேன். ஒலிப்பதிவைக் கேட்டபோது, பறவையின் குரல் தெளிவாக பதிவாகி இருந்தது. மகிழ்ச்சி!


தேவியிடம் ‘இதுவரை நடந்தது என்ன?’ என்று சுருக்கமாய் விளக்கிவிட்டு, 11 வருடத்திற்கு முன்னால் ‘குரல் எப்படி இருக்கும்?’ என்று என்னிடம் கேட்டவரை Facebook-ல் கண்டுபிடித்து, இதை அனுப்பி, ‘இப்ப சொல்லுங்க பாக்கலாம்’ன்னேன். ‘நான் இருக்கிற ஊர்ல சரியான இன்டர்நெட் வசதி இல்ல. சரியா உன்னோட ஃபைல் டவுண்லோட் ஆகல’ன்னு, அவரும் எஸ்கேப் ஆயிட்டாரு. கண்டு பிடிக்க முடியல. 


இந்த பறவையின் குரலை, சில பறவை அடையாளம் காண உதவும் குழுமங்களில் (Bird Identification Groups) பதிவிட்டுக் கேட்டும் யாராலும் சொல்ல முடியவில்லை. பெரும்பாலும் பறவையின் படம் போட்டு, ‘இது எந்த பறவை?' என்றால், உடனே பதில் சொல்கிறார்கள். 


எப்படியாவது இந்த தடவை, அந்த பறவையைக் பார்த்துவிட வேண்டும் என்று முடிவு செய்து, தேடலை ஆரம்பித்தேன். தினமும் அந்த பறவை ஒரு நாள் தவறாம  பாடி, தூக்கத்திலிருந்து என்னை எழுப்பிவிட்டுவிடும். வீட்டில் மட்டுமல்ல; ஞாயிற்றுக்கிழமை யோகா வகுப்புகளிலும், தியானம் செய்யும்போது அந்தப் பறவையின் பாட்டு கேட்கும். தேவி ‘லைட் ஸ்லீப்பர்’, விடாமல் தொந்தரவு செய்து  அவரையும் எழுப்பி விட்டுவிடும். “சீக்கிரம், அந்த பறவைக்கு ஏதாவது ஒரு பெயரை வைச்சு விடு. தினம் வந்து ‘எனக்கு ஒரு பேரு  வைக்கிறயா, இல்லியா’-ன்னு வந்து தொல்லை பண்ணுது”, என்பார்.  


வழக்கமா நான் தூங்கிக்கொண்டு இருக்கும் இன்னொரு அதிகாலையில், தேவி ‘கண்டேன், உன் பறவையை!’ என என்னை எழுப்பி, 400mm லென்ஸ் வைச்ச DSLR கேமராவைக் கேட்க, கொஞ்ச மாசத்துக்கு முன்னாடி, பரண் மேல் ஏறக்கட்டி வைச்ச கேமரவைத் தூக்கி கொண்டு, தோட்டத்துக்கு ஓடிப்போய் வியூஃபைண்ட்ரில்  பார்க்க, ஒரு பெரிய காக்கா மாதிரி மரத்தில் உக்காந்து கொண்டு, சம்மந்தமே இல்லாத ஆழமான குரலில் பாடிக்கொண்டு இருந்தது. பூங்கா தூரமா (ஒரு 500 மீட்டர் தான்!) இருக்கேன்னு, இவ்ளோ நாளா போகாத நான், இத்தன வருடமாக் கண்ணுக்கேட்டாம இருந்த பறவையை கேமராவில் சிறை பிடிக்கலாம்-னு  (போதுண்டா, வர்ணனை!),  அது பறந்து போகுமுன், போய் ஓரிரு போட்டோ எடுத்தே விட்டேன். 



போட்டோவை  Google Reverse Image Search-ல் போட்டதும், கிடைத்தது, இவ்ளோ வருடமா தேடிய பறவையின் பெயர் - பைட் கூராவாங் (Pied Currawong). 






நம்ப முடியாத ஆச்சரியம் என்னன்னா, அந்த பறவையின் பெயர் தெரிஞ்ச பின்னாடி, அந்த பறவை வருவதில்லை; கத்துவதில்லை.  இல்ல, இல்ல.. அது வந்தாலும் வரும்; கத்தினாலும் கத்தும். ஒருவேளை நாந்தான் கஷ்டப்பட்டு அந்தப் பறவையை தேடிக் கண்டு புடிச்சதால (இதை தேவி படித்தால் கெட்டுச்சு கதை!) நிம்மதியா தூங்கறேன்னு நினைக்கிறேன்!  

 

இதன் மூலம் நான் சொல்லக்கூடிய கருத்து:

நீங்கள் எதையாவது அடைய விரும்பினால், வெறும் விருப்பம் மட்டும் போதாது; அதற்கான விடாமுயற்சி இருந்தால், இந்த உலகம், நீங்கள் விரும்பியதை உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கும்.


-திரு


https://facebook.com/writerthiru


#தமிழ் #தமிழ்ப்பதிவு #ஆஸ்ட்ரேலியா #ஆஸிதமிழன் #ஆஸ்திரேலியா #ஆஸ்திரேலியவாழ்க்கை


Comments

Popular posts from this blog

அவர்களும், நானும்!

அவர்கள்: “என்னங்க... உங்க வீட்டு டிவி ரொம்ப சிறுசா இருக்கு?” நான்: எங்க வீட்ல பெருசா இருக்கிற 170 இன்ச் புத்தக அலமாரி-யை கவனிச்சீங்களா? அவர்கள்: “XYZ (Private School) பள்ளிக்கூடந்தான் (or ABC டீச்சர்தான்) பெஸ்ட் , என் பொண்ணு அங்கதான் படிக்கிறா..நீங்களும் உங்க பையன அங்க சேத்துடுங்களேன்” நான்: ஸ்கூல் பீஸ் கட்டறீங்கன்னா, இப்பவே நாங்க ரெடி!  அவர்கள்: “கார் வேற பழசாயிடுச்சு, வேற வாங்கிடுங்களேன்..” நான்: நீங்க எப்ப அனுமதி கொடுப்பீங்கன்னுதான், பணப்பையோட காத்துக்கிட்டிருந்தோம், தோ கிளம்பிட்டோம்! அவர்கள்: “வாங்கறதுதான் வாங்கறீங்க..புது காராவே வாங்கிடுங்களேன்...”  நான்: நீங்களே ஒண்ணு வாங்கி கொடுத்துடுங்களேன், நன்றியோடு வாங்கிக்கிறோம். கேஷா... கார்டா... ப்ரோ? அவர்கள்: "வெயிட் குறைக்கிறதெல்லாம் பெரிய மேட்டரே இல்ல ப்ரோ...டெய்லி வெறும் வயித்தில 'ஹாட் வாட்டர் + லெமன் ஜூஸ்' 45 நாள் விடாம குடிங்க.. வேற ஒண்ணும் செய்ய தேவையில்லை...சூப்பர்-ஆ ஸ்லிம் ஆயிடுவீங்க" நான்: வெயிட் குறைக்கிறதுக்கு டிப்ஸ் கேட்டனா நான்...? நான்: “உங்க பையனுக்குத் தமிழ் படிக்க சொல்லிக்

கல் தோன்றி, மண் தோன்றா

  “கல்  தோன்றி,  மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தகுடி தமிழ்க் குடி”  இந்த Punch  Dialogue-ஐ  சொல்லி ஆரம்பிக்கப்பட்டு, கைதட்டல் வாங்கிய தமிழ்ப்  பேச்சுகள் தமிழ் மேடைப் பேச்சு வரலாற்றில் மூவாயிரம் கோடியே முன்னூற்று முப்பத்து மூணு இருக்கும்.   முனைவர் கண்ணபிரான் ரவிசங்கர் (கரச) எழுதிய ‘ அறியப்படாத தமிழ்மொழி ’ என்னும் புத்தகத்தை  படிக்கும்வரை நானும் ஏதோ ஒரு புலவர்  பிற்காலத்தில் வரப்போற, ‘ஓங்கி அடிச்சா  ஒன்றரை டன்ன்னுடா’க்கு கைதட்டி குதுகலிக்கும் தமிழ் மக்களுக்கு புகழ்ச்சி புடிக்கும்ன்னு இதை எழுதி வைச்சிட்டு போயிட்டாரோன்னு கடந்து போயிருக்கேன்.   அதெப்படி? கல்,  மண் தோன்றுமுன்னே தமிழ்க் குடிமக்கள் பிறந்து விட்டார்களா? இல்ல, தமிழ் மொழி மற்ற மொழிகளை  விட அவ்வளவு பழமையானதா? ன்னு  ஆராய்ச்சி செஞ்சு புத்தகத்தின் முதல் கட்டுரையாக  எழுதி இருக்கார் கரச (https://twitter.com/kryes)   சரி,  எங்கே  இருந்து வந்தது இந்த இரண்டு வரிகள்? ஐயனாரிதனர் என்பவர் எழுதிய புறப்பொருள் வெண்பா மாலை என்ற இலக்கண நூலில் வரும் பாடல்தான் அது.  பொய் அகல, நாளும் புகழ் விளைத்தல் என் வியப்பாம்?  வையகம் போர்த்த, வயங்கு ஒலிநீ